தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்து அறநிலையத்துறை கோவில்களில் தொடர்ந்து 5 ஆண்டுகள் தற்காலிகமாக பணிபுரியும் தகுதியான பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்படுவார்கள் என இந்து அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக இந்து அறநிலையத்துறை கோவில்களில் தற்காலிகமாக பணிபுரியும் 1,221 தினக்கூலி பணியாளர்களை பணிவரன்முறை செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக பணியாளர்கள் 1,221 பேரில் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் 265 பேர், 35 வயதுக்கு மேற்பட்டோர் 956 பேர் ஆவர். திருக்கோவில் விதிகள்படி 35 வயது நிறைவு செய்தவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க முடியாது.
இருந்தபோதிலும் 35 வயதிற்கும் மேற்பட்ட பணியாளர்களை அவர்களின் பணி, தகுதி, நன்னடத்தை மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து பணி வரன்முறை செய்வதற்கு வயது வரம்பு குறித்த விதியை தளர்வு செய்து அரசாணை பிறப்பிக்க இந்து அறநிலையத்துறை ஆணையர் கேட்டுக்கொண்டார்.
அதன்படி, 5 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தகுதியான பணியாளர்களை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பணி வரன்முறை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 1,221 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment